மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ரி-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2 - 1 என கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் 1--1 என்ற அடிப்படையில் வெற்றிபெருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இடம்பெற்றது.

எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலில் களமிறங்கியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ரிஸ்வான் ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களை அடிக்க பக்கர் சமான் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் அதில் ரஷீத் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் 155 ஓட்டங்கள் வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக ஜேசன் ரோய் 64 ஓட்டங்களையும் டேவிட் மாலன் 31 ஓட்டங்களையும் அடிக்க பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 3 விட்க்களை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தொடரின் நாயகனாக லியாம் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...