ஆசிரியர்களுக்கு தடுப்பு மருந்தேற்றும்வரை கற்றல் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம்

பிராந்திய கற்றல் நிலையங்களில் கடமையாற்ற நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி மருந்தேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை இந்நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் பாேதே சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சு மாணவர்களின் கல்வியை சீரமைக்க முன்னடுக்கும் எந்த திட்டத்தையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

மத்திய மாகாணத்தில் 442 நிலையங்களும் வடமேல் மாகாணத்தில் 345 நிலையங்களுமாக நாடுமுழுவதும் பிராந்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இன்னமும் கொவிட்19 நிலைமை சீராகவில்லை. குறையவுமில்லை. ஆனால் 5 ஆம் திகதியிலிருந்து இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, இங்கு கடமையாற்ற அழைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தடுப்பூசி மருந்தேற்றப்படல் வேண்டும்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாது கடமைகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நாம் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

(அவிசாவளை நிருபர்)


Add new comment

Or log in with...