விண்வெளி வீரர்களுடன் சீன ஜனாதிபதி நேரடி பேச்சு

விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலை யும், உங்கள் வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும் என சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறியுள்ளார்.

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்போது விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங், டாங் ஹோங்போ என்னும் 3 வீரர்களையும் கடந்த 17ம்திகதி அனுப்பி வைத்துள்ளது. இது ஒரு சாதனையாக சீனாவால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீன விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த 3 வீரர்களுடனும் ஜனாதிபதி ஜின் பிங் நேற்றுமுன்தினம் பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே முதல் முறையாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அவர்களது விண்வெளி ஆய்வுப்பணிக்காக ஜின்பிங் நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர், “நீங்கள் 3 மாதங்கள் விண்வெளியில் செலவிடுவீர்கள். விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலையும், உங்கள் வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடர்ந்து அவர் விண்வெளி வீரர்களுடன் பேசும்போது, “நமது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். இது விண்வெளியை மனித குலத்தின் அமைதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

3 வீரர்களும் தங்களுக்கு அளித்து வருகிற ஆதரவுக்காக ஜின் பிங்குக்கு மனமார நன்றி தெரிவித்தனர். 5 நிமிடம் நடந்த இந்த உரையாடல் சீன அரச தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த 3 விண்வெளி வீரர்களும் அடுத்த 3 மாதங்களில் ‘தியாங்காங் ஹெவன்லி பேலஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த விண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பார்கள். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...