டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு பாரிய சவாலாக விளங்கும்

தொற்று நோய் நிபுணர் கருத்து

டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி கூறியுள்ளார்.

கொரோனா 2வது அலையின் போது உருமாற்றம் அடைந்த, ‘டெல்டா’ வகை வைரஸ், மிக வேகமாக பரவியது. இந்த வைரஸ், டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்.01 என்ற வைரசாக மேலும் உருமாற்றம் அடைந்து, 3வது அலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.

இந்தியாவில் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. இதே வகையான கொரோனா தொற்று இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தொற்று நோய்கள் மருத்துவ நிபுணர் டாக்டர்.அந்தோணி ஃபாசி, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்டா வகை கொரோனா காரணமாக அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். இந்த வகை கொரோனாவானது மிக வேகமாக பரவக்கூடியது என்றும் அதிக வீரியம் கொண்டது என்றும் டாக்டர். அந்தோணி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வரும் பைசர்/பையோ என்டெக் தடுப்பூசிகள், இந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவை எதிர்த்து போராடுவதில் நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் இதுவரை 45 சதவீதம் பேருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...