பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலையுடன் நீக்கம்

தொடர்வது குறித்து ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் இன்று முடிவு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு

நாடு முழுவதும் அமுலிலிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 04 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து இன்றைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் முடிசெய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒருமாத காலத்தின் பின்னர் கடந்த 21ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகளையும், தொழில் நடவடிக்கைகைகளையும் கொண்டுசெல்ல அரசாங்கம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு ஜுலை 05 ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்கு உள்ளே போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று பொது போக்குவரத்தும் 50 சதவீதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொசன் போயா தினத்தை முன்னிட்டு மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு மீண்டும் போக்குவத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் வீட்டில் இரண்டு பேர் மாத்திரமே வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பட்டியல்படுத்தப்பட்டுள்ள தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கவரும் சூழலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கொவிட் தொடர்பிலான ஜனாதிபதி செலணியில் இதுகுறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...