மொரட்டுவை மாநகர சபை மேயர், சமன்லால் பெனாண்டோவி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 27ஆம் திகதி, மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மெதடிஸ்த தேவாலயமொன்றில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் வைத்தியர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமயிலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்றையதினம் (11) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்ட அவரை, இன்று மொரட்டுவை மேலதிக நீதவான் உத்தலா சுவந்துருகொட முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, ரூ. 20,000 ரொக்கம் மற்றும் தலா ரூ. 200,000 கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில், இன்று (28) அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 01ஆம் திகதி அவரால் முன்வைக்கப்பட்ட பிணைக்கோரிக்கையை மொரட்டுவை மேலதிக நீதவான் உத்தால சுவந்துருகொட நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment