- பாதிப்பு 20 வருடங்களுக்கு நீடிக்கும் அபாயம்
கடலில் மூழ்கிவரும் X-Press Pearl கப்பலில் பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என, சோதனையிட, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் குறித்த பகுதியில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் மூழ்கி வரும் கடற்பகுதிக்குச் சென்ற, குறித்த அதிகாரசபையின் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, அங்கு நீர் மாதிரிகளையும் சேகரித்துள்ளதாக, சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த கப்பல் மூழ்கி வரும் இடத்தில் தென்மேற்கு திசையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான, நாரா (NARA) அறிவித்துள்ளதுடன், அது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Just like we don't have a community spread, there is no oil spill from the #XPressPearl. #SriLanka #MarinePollution #Environemnt #disaster pic.twitter.com/ZfGNX5VCWV
— Prasad Welikumbura (@Welikumbura) June 10, 2021
இக்கப்பலினால் ஏற்படக் கூடிய சூழல் பாதிப்பு அபாயம், சுமார் 20 ஆண்டுகளுக்கு நீடிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த கப்பலால் இலங்கைக்கு ஏற்படும் சூழல் பாதிப்புக்கு காரணமான, அனைவர் மீதும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Add new comment