ரூ.5,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்

கொவிட்-19 தொற்று காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வருமானம் குறைந்த குடும்பங்கள் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், மேன்முறையீடு செய்யலாமென, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

வருமானம் குறைந்த குடும்பங்கள் கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தியதன் பின்னர் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கான மேன்முறையீடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வழிகாட்டலுக்கமைய ரூபா 05 ஆயிரம்கொடுப்பனவு முதல் கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிரமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தாக்கம் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பஙக்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டத்திலும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக இக் கொடுப்பனவு சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள், தொழிலிழந்தோர், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வருமானத்தை இழந்த குடும்பங்கள், முதியோர்கள், நாட்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இக் கொடுப்பனவும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 83 ஆயிரத்தி 666 குடும்பங்களுக்காக 418.33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...