பயணத்தடை சட்டங்களை மேலும் கடுமையாக்கவும்

ஜனாதிபதிக்கு விசேட மருத்துவர்கள் சங்கம் கடிதம்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தினம் தினம் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகளுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் அது தொடர்பில் கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஆர். ஞானசேகரம் ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 12 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் 28 வீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றன.

இத்தகைய நிலையில் பயணத் தடையை மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். தினந்தோறும் ஆஸ்பத்திரிகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நோயாளிகள் வருகின்றனர். மேலும் நோயாளர்களின் தொகை
அதிகரிக்குமானால் ஆஸ்பத்திரி கட்டமைப்பு அதனை தாங்கமுடியாமல் போகலாம்.

அதேபோன்று, தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வினைத்திறனுடனும் சாதாரண நடைமுறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் தேவையான இரண்டாவது தடுப்பூசிகளையும் காலம் தாமதிக்காது பெற்றுக்கொள்வதற்கு நிலையான செயற்திட்டமொன்றை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும் என்றும் விசேட மருத்துவர் சங்கம் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...