இரணைப்பாலை - மாத்தளன் மீனவர்களுக்கிடையில் மோதல்; 4 பேர் மருத்துவமனையில்!

இரணைப்பாலை - மாத்தளன் மீனவர்களுக்கிடையில் மோதல்; 4 பேர் மருத்துவமனையில்!-Fight Between Fishermen-One Person Arrested

முல்லைத்தீவு மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் முல்லைத்தீவு பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில், சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு சாலை சிறுகடலுக்கு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து பதிலுக்கு மாத்தளன் பகுதியினை சேர்ந்தவர்களும் தாக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் வாள், கம்பி, கத்தி போன்றன கொண்டு இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது இரணைப்பாலையினை சேர்ந்த மூன்று மீனவர்களும், மாத்தளன் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தாக்குலின் போது இரண்டு மோட்டார் சைக்கில்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் இரணைப்பாலையினை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

(முல்லைத்தீவு நிருபர் - சண்முகம் தவசீலன்)


Add new comment

Or log in with...