ஈரான் ஜனாதிபதி தேர்தல்: அஹமதிநிஜாத் போட்டி

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநிஜாத் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவித்துள்ளார்.

தீவிர பழைமைவாதியான அஹமதிநிஜாத் 2005 தொடக்கம் 2013 வரை ஈரான் ஜனாதிபதியாக பதவி வகித்ததோடு 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றபோதும் தகுதி இழப்புச் செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரியவராக காணப்பட்டபோதும் நாட்டில் அவருக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். எனினும் இம்முறையும் அவர் தகுதி இழப்புச் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் அலி ஹொஸைனி கமெனெய் உறுதி அளித்துள்ளார். ஒப்பீட்டளவில் மிதவாதியாக பார்க்கப்படும் பதவியில் உள்ள ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது இரண்டு தவணைகளையும் பூர்த்தி செய்திருக்கும் நிலையில் அவரின் இடத்திற்கு மற்றொருவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பதிவு செய்வது, வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் பிரதான வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...