இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள் நேற்று முன்தினம் (11) காலை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வெள்ளிக் கொலுசுகள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் பொலிஸார் இனிகோ நகரைச் சேர்ந்த பட்டுராஜன் (38) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த எம். அந்தோணி (50) என்பவரது வீட்டில் சோதனயிட்டதில், 25 கிலோ எடையுள்ள வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 18 இலட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிஸார் 25 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.மேலும், பட்டுராஜை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அந்தோணி என்பவரை தேடி வருகின்றனர்.

மன்னார் குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...