சிங்கங்களையும் விடாத கொரோனா

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரசால் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் சுமார் 10 வயதுடைய 12 சிங்கங்கள் உள்ளன. அதில் சில சிங்கங்களிடையே பசியின்மை, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதை வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கவனித்தனர். கடந்த 24ம் தேதி கால்நடை அதிகாரிகள் சிங்கங்களின் ஓரோபார்னீஜியல் (மென்மையான அண்ணம் மற்றும் ஹையாய்டு எலும்புக்கு இடையில் உள்ள குரல்வளையின் ஒரு பகுதி) மாதிரிகளை எடுத்து சோதனையிட்டதில், தலா நான்கு ஆண் மற்றும் பெண் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து நேரு விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் சித்தானந்த் குக்ரெட்டி கூறுகையில், சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது உண்மைதான். ஆனால், கொரோனா பரிசோதனை அறிக்கைகளை நான் இன்னும் பெறவில்லை,' என்றார்.

வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஷிரிஷ் உபாதி கூறியதாவது: நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 8 புலிகள் மற்றும் சிங்கங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டன.

இருப்பினும் காட்டு விலங்குகளில் இதுபோன்ற பாதிப்புகள் இருப்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், ஹாங்காங்கில், வளர்ப்பு பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...