கொரோனா பரவலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் சமய ஒன்றுகூடல்

பாகிஸ்தானில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாட்டின் கிழக்கு நகரான லாஹோரில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம் வழிபாட்டாளர்கள் தமது மதச் சடங்கிற்காக முகக்கசவங்களும் இன்றி ஒன்று திரண்டுள்ளனர்.

அண்டை நாடான இந்தியாவிலும் சமய ஒன்று கூடலை அடுத்தே நோய்த் தொற்று தீவிரம் அடைந்த நிலையில் பாகிஸ்தானிலும் அவ்வாறான நெருக்க ஒன்று ஏற்பட்டுள்ளது. பெரும் ஒன்று கூடல்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தபோதும், முஹமது நபியின் தோழரும் அவரது மருமகனுமான இமாம் அலியின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை தடுப்பதில் மதத் தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் அண்மையில் கும்பமேளா உட்பட மதச் சடங்குகளில் மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் பங்கேற்ற நிகழ்வே அங்கு நோய்த்தொற்று தீவிரம் அடைய காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்தியாவின் நிலை குறித்து பாகிஸ்தான் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பாக். அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் லாஹுரில் நடைபெறும் ஷியா முஸ்லிம்களின் மதச் சடங்கில் எட்டு முதல் பத்தாயிரம் வழிபாட்டாளர்கள் பங்கேற்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வேறு நகரங்களிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மூன்றாவது அலை கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பாகிஸ்தான் போராடி வருகிறது. அங்கு 800,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 18,000 பேர் உயிரிழந்துள்ளனர்.


Add new comment

Or log in with...