உதைபந்தாட்ட போட்டி ஆரம்பம்; ரெட் ஸ்டார் அணி வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன வரலாற்றில் புதியதோர் தொடராக தொழில்சார் சுப்பர்லீக் 2021 உதைபந்தாட்ட போட்டிகள் நேற்று முன்தினம் (19) உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.

பிபா உலககிண்ண போட்டியில் போன்று இச்சுப்பர்லீக் சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு சொந்தமாகும் வகையிலான அணியின் பெயரும், வருடமும் பொறிக்கப்பட்ட நகல் கிண்ணம் முதல் முறையாக வழங்கப்படவுள்ளது.அசல் சம்பியன் கிண்ணமானது கொழும்பு -07 உதைபந்தாட்ட இல்லத்தில் பாதுகாப்பாக காட்சிப்படுத்த வைப்பதுடன் சம்பியன் அணியினது பெயரும் வருடமும் இக் கிண்ணத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இச்சுற்றுப்போட்டிகள் நேற்று முன்தினம் (19) ஆரம்பமாகிய நிலையில் இறுதிப் போட்டி ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முடிவடையும். இத் தொடரில் புளு ஸ்டார், புளு ஈகல்ஸ், கொழும்பு எப்சி, டிபெண்டர்ஸ்,நியுயங்ஸ், ரட்ணம்,ரெட் ஸ்டார், றினோன், சீஹோகஸ், அபகன்றி லயன்ஸ் ஆகிய பத்து அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியாக நேற்றுமுன்தினம் மாலை 4.30க்கு கொழும்பு எப்சி அணியும் வென்னப்புவ நியுயங்ஸ் அணியும் மோதின.

இப் போட்டியின் 15, 86 நிமிடங்களில் கொழும்பு எப் சி அணியின் வீரர்களான சமட் தில்சான் 2 கோல்களையும் ஸ்வான் ஜாகர் , மூமாஸ் பாபே ஆகிய வீரர்கள் 53, 80 நிமிடங்களில் இரு கோல்களையும் பெற்றனர். இறுதிவரை போராடிய நியு யங்ஸ் அணி ஒரு கோலையும் போடாத நிலையில் நான்கு கோல்களால் கொழும்பு எப் சி தன் முதலாவது வெற்றியை சுவீகரித்தது.

புளு ஸ்டார் எதிர் ரெட் ஸ்டார் மத்தியில் மின்னொளியில் இடம்பெற்ற போட்டியில் ரெட்ஸ்டார் அணியின் வீரர்களான எம்.ரகுமான் மூன்று கோல்களையும் அபூஅமீர் ஒரு கொலையும் பெற்றனர்.

புளு ஸ்டார் அணியின் வீரர்களான ஏ.ஜெரி செனல் சந்தோஷ் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றனர்.4 – 2 என்ற கோல்கள் கணக்கில் பளு ஸ்டார் அணியினரை ரெட் ஸ்டார் அணியினர் தோல்வியடைய வைத்தனர்.

வட கொழும்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...