- எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 இற்கும் அதிக சட்டத்தரணிகள் ஆஜர்
யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அவரை ரூ. 2 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் (LTTE) காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்றையதினம் (08) இரவு வாக்கு மூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையத்தில் சுமார் 6 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் (09) இரவு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் முற்படுத்தப்பட்டார்.
அதன் போது இரண்டு இலட்ச ரூபா ஆள் பிணையில் விடுவித்த நீதவான் வழக்கினை 6ஆம் மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.
மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுதந்திரன் தலைமையில் 25 சட்டத்தரணிகளுக்கு மேல் முன்னிலையாகிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Arrest of Jaffna Mayor is worrisome. Having strong rule of law (with judicial safeguards) is a better way to fight terrorism while protecting everyone’s basic freedom.
— Ambassador Teplitz (@USAmbSLM) April 9, 2021
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
Add new comment