யாழில் மாநகர காவல் படை சீருடையால் கிளம்பிய சர்ச்சை

பணிகளை நிறுத்த பொலிஸ் கோரிக்கை; ஆணையாளரிடம் விசாரணை

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாவும் வெற்றிலை துப்பினால் 2,000 ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்திருந்தார்.

அத்தோடு, இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, காவல் படையினர் நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

காவல் படையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வந்தன.

காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறை சீருடைகளை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, யாழ். மாநகர சபை ஆணையாளரை நேற்று முன்தினம் இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார், நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 03.00 மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

அதனையடுத்து காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர். அதன்பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக காவல் படையின் சீருடைகளை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.விசேட, யாழ். குறூப் நிருபர்கள்

 


Add new comment

Or log in with...