ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ரஷ்ய மொழி பாடத்துக்கான பரீட்சையின் போது ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறை இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்ததாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இம்முறை சாதாரணதரப் பரீட்சையின்போது ஆள்மாறாட்டம் செய்ததாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமையுடன் சாதாரண தரப் பரீட்டைகள் நிறைவு பெற்றுள்ளன, அன்றைய தினம் நடைபெற்ற ரஷ்ய மொழி பாடத்துக்கான பரீட்சையின்போது ஆள்மாறாட்டம் செய்ததாகவே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை பரீட்சை நிலையமொன்றில் இளைஞர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சையில் தோற்றுவதற்கு வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

 இதன்போது 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இம்முறை பரீட்சையின்போது இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்ததாக ஏற்கனவே முல்லைத்தீவு, வலஸ்முல்ல மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளிலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் பரீட்சை சார்ந்த சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...