விருந்தினர்களை சந்திக்க ரஞ்சனுக்கு இரு வார தடை

விருந்தினர்களை சந்திக்க ரஞ்சனுக்கு இரு வார தடை-No Visitiors will be Allowed to Visit Ranjan Ramanayake for 2 Weeks

சிறைச்சாலையில் விருந்தினர்களை சந்திக்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரு வார கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, தன்னை சந்திக்க வந்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருடன் செல்பி புகைப்படம் எடுத்தமை தொடர்பில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (09) தன்னை சந்திக்க வந்த விருந்தினருடன் எடுத்த செல்பி புகைப்படமொன்றை, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் இன்றையதினம் (11) சிறைச்சாலை ஒழுக்காற்று மண்டபத்திற்கு அழைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 78ஆவது பிரிவுக்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு, விருந்தினர்களை சந்திப்பதற்கு அவருக்கு தடை விதித்து, இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், அதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...