சாய்ந்தமருது பிளாஸ்டர் அணி சம்பியன்

மருதமுனை மறுகெப்பிட்டல் கிரிக்கட் கழக ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் சுற்றுத்தொடரில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் சம்பியனானது. விலகல் முறையில் நடைபெற்ற இந்த சுற்றுத்தொடரின் முதலாவது நாளினுடைய குழு நிலைப்போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்று. அதில் மருதமுனை மறுகெப்பிட்டல் கிரிக்கட் கழக அணி ஏனைய அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

ஞாயிறன்று இடம்பெற்ற இரண்டாவது குழு நிலைப்போட்டியில் தன்னுடன் மோதிய ஏனைய அணிகளை வீழ்த்தி சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

மருதமுனை ஸம்ஸ் மைதானத்தில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக அணிக்கும் மருதமுனை மறு கெப்பிட்டல் அணிக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மருதமுனை மறு கெப்பிட்டல் அணி 7 ஓவர்கள் முடிவில் 51 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். சிறந்த பந்து வீச்சுகளை வீசிய சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழக வீரர் ஜே.எம். சௌக்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கமைய இரண்டாவதாக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய சாய்ந்தமருது பிளாஸ்டர் அணி சார்பிலான ஆரம்பநிலை துடுப்பாட்டம் சோபிக்க தவறினாலும் அணித்தலைவர் மின்ஹாஜின் நிதானமான துடுப்பாட்டத்தினால் சாய்ந்தமருது பிளாஸ்டர் அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இவ்வருடத்தில் இரண்டாவது கிரிக்கெட் சுற்றுத்தொடர்களின் வெற்றி கிண்ணத்தை சாய்ந்தமருது பிளாஸ்டர் வி.கழகம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...