கொவிட்19 தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி

கட்டுக்கோப்பான செயற்பாடுகளே காரணம் என்கிறார்  இராணுவத் தளபதியும், கொவிட்- 19 தடுப்புக்கான தேசிய  செயற்பாட்டு நிலைய தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா

சுகாதார நடைமுறைகளுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படுதல் மற்றும் தடுப்பூசி ஏற்றுதல் செயற் திட்டத்தின் காரணமாக ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் கொவிட்– 19 தொற்றுக்கு ஆளாகின்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றதென பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும், கொவிட்– 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

சமூக இடைவெளியைப் பேணுதல், அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்கிச் செயற்படுதல், நடைமுறை செயற்பாடுகளுக்கு அவசியமான முறையில் இசைவாக்கம் அடைதல் மூலம் நோய் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொவிட்– 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட்– 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிடுகையில், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் சன நெரிசலான பகுதிகளில் தொற்றாளர்கள் அதிகளவில் அறியப்படுகின்றனர் என சுட்டிக் காட்டினார்.

அதே போல், சுகாதாரத் துறை ஊழியர்கள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பவர்கள், சிரேஷ்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளின் போது முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் சனத்தொகையையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களின் சனப் பரம்பல் தொகையினையும் கணக்கிட்டு அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போதும் வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதுவரை 102,000 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும், வெளிநாடுகளில் இருக்கின்ற இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து வெளிநாடுகளிலிருந்து அதிகளவான இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


Add new comment

Or log in with...