- இலங்கையில் இதுவரை 189,349 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
பொதுமக்களுக்கு கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி (Oxford-AstraZeneca) வழங்கல் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வரும் மேல் மாகணத்திலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புறுவோர் மற்றும் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் அதிக அபாயத்தை எதிர்நோக்கும் பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு, முதலில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நேற்று (14) வரை 189,349 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
Add new comment