இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ. 2 வழங்கப்படும்

இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ. 2 வழங்கப்படும்-Overseas Workers Get Rs 2 Per USD When Send Remittances to Sri Lanka

2021 வரவு செலவு திட்ட முன்மொழிவு அமுல்

வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் தாம் உழைக்கும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்பும்போது, அதன் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும், இரண்டு ரூபாய் (ரூபா 2)  ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்கள்  ஆற்றிவரும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் 2021 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு இத்திட்டத்தை அமுல்படுத்துவதாக, இது தொடர்பில் நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்குவிப்பு திட்டமானது உள்ளூர் வணிக வங்கிகளினால் அமுல்படுத்தப்படுவதோடு ஊக்குவிப்புக்கான தொகையானது அரசாங்கத்தினால் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்குரிய வழிகாட்டல்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படவுள்ளது.

எனவே தம்மிடமுள்ள அந்நியச் செலாவணியை பாதுகாப்பான வழிகளினூடாக அனுப்புவதற்கும் அதனை இலங்கை ரூபாய்க்கு மாற்றீடு செய்யும்போது அதிக பணத்தை ஈட்டிக்கொள்வதற்கும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு வெளிநாட்டில் தொழில்புரிவோரிடம் நிதியமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...