- அக்கரைபற்று பொலிஸ் பிரிவில் 58 பேர் அடையாளம்
- கல்முனை சுகாதாரப் பிரிவில் இதுவரை 86 பேர் அடையாளம்
- நடமாடும் வாகனங்களில் அவசியமான உணவுப் பொருட்களை வழங்க பணிப்பு
அக்கரைபற்று பொலிஸ் பிரிவை இறுக்கமான சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படுவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனையில் இருவர் உள்ளிட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுவது குறித்து வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை 58 கொரோனா தொற்றாளர்கள் அக்கரைபற்று பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளதோடு, மொத்தமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாஹரன் தெரிவித்தார்.
எனவே இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் உள்ளவர்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என, ஆளுநர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
குறித்த பிரதேசத்திற்கு அவசியமான உணவுப் பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று 51 பேர், இறக்காமம் 11 பேர், அட்டாளைச்சேனை 02 பேர், ஆலையடிவேம்பு 01 பேர், பொத்துவில் 07 பேர், கல்முனை தெற்கு 05 பேர், சாய்ந்தமருது 03 பேர், காரைதீவு 01 பேர், நிந்தவூர் 01 பேர், நாவிதன்வெளி 02 பேர், திருக்கோவில் 02 பேர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாறை 01, தமண 02, பதியத்தலாவை 03, தெஹியத்தக்கண்டி 03 பேர், மஹா ஓயா 01 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..
அதற்கடைய அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 96 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Add new comment