தனிமைப்படுத்தல் என்பது ஆதிகாலத்திலும் மக்கள் கடைப்பிடித்த முற்பாதுகாப்பு ஏற்பாடு

தனிமைப்படுத்தல் என்ற சொல் 1920ம் ஆண்டின் பின்னர் உலகை மீள ஆட்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தலை எம்மால் மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் கொடிய நோய்த் தொற்றுகளிலிருந்து தப்பி ஆரோக்கியமாக வாழ்வதற்காக தனிமைப்படுத்தலை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

உலகளாவிய ரீதியில் இரண்டாவது அலையாக பரவியிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிர்ப்பு மருந்து சர்வதேச ரீதியில் அறிமுகம் செய்யப்படாமையால் ‘வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற தொனிப்பொருள் உலகளவில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

தொற்று நோய்களுக்கு எதிர்ப்பு மருந்துகள் இல்லாமல் போகும் போது நோயாளர்கள் தனிமைப்படுத்தப்படுவது வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வருகின்ற ஒன்றாகும். 1918 பெப்ரவரி முதல் 1920 ஏப்ரல் வரை உலகை ஆட்கொண்ட ‘ஸ்பானிஸ் புழு’ அல்லது ‘இன்புளுவன்ஸா பென்டமிக்’ முதலாவது, இரண்டாவது அலைகள் ஏற்பட்ட போது மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இது எமக்குத் தெரிந்த வரலாறாகும்.

ஆபிரிக்க ஆதிக்குடிகளின் மானுடவியல் வரலாறு குறித்த ஜனீ பொடி எழுதிய கட்டுரை ஒன்றில் கட்டுமஸ்தான கறுப்பின இளைஞன் ஒருவன் பற்றி குறிப்பிட்டிருந்தார். அக்குலப் பெண்களின் மனதை வென்றவன் அவன். ஆனால் ஒருபோதும் தந்தை சொல் கேட்காத பிடிவாதக்காரன். அந்த ஆதிக்குடிகள் வாழ்ந்த பகுதியில் மந்தைகளுக்கு நீர் அற்றுப்போகும் நிலை ஏற்பட, தந்தை அந்த இளைஞனை அழைத்து நீர் இருக்கும் பகுதியை கண்டுவருமாறு பணிக்கிறார். அப்போது அந்த இளைஞனிடம் இரண்டு விடங்களை பின்பற்றுமாறு தந்தை கேட்டுக் கொள்கிறார். முதலாவது, இறந்து கிடக்கும் மிருகங்களை அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டாம். இரண்டாவது, கொண்டு செல்லும் நீரை சாப்பிட்ட பின்னர் குறைந்தளவு பருகவும் என்று தந்தை அந்த இளைஞனிடம் அறிவுரை சொல்கிறார்.

ஆனால் அந்த இளைஞனோ தனது தந்தையின் அறிவுரையைக் கேளாது இறந்து கிடந்த மான் ஒன்றின் இறைச்சியை வயிறு புடைக்க உண்டதுடன் கொண்டு சென்ற நீரை தீருமளவு பருகியும் விடுகிறான். இவ்வாறு உண்டு, நீர் அருந்தியதால் ஏற்பட்ட களைப்பில் அந்த இளைஞன் அவ்விடத்திலே உறங்கவும் செய்கிறான். பின்னர் கண்விழித்துப் பார்த்த அவன், சூரியன் மறைவதை உணர்ந்து வீடு திரும்புகிறான். வீடு வந்ததும், தந்தையிடம் தான் நீரிருக்கும் பகுதி எதையும் காணவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டினுள் இருக்கலானான்.

இரவு பொழுதுதை அவனால் கடக்க முடியவில்லை. அவன் வயிற்று வலியால் பீடிக்கப்பட்டான். பின்னிரவு தொடங்க அவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. வயிறு வலித்துக் கொண்டே வயிற்றுப் போக்கும் ஏற்படுகிறது. தந்தையை சத்தமிட்டு அழைக்கிறான். தந்தை அவன் படும் வதையைக் கண்டு கண்கலங்குகிறார். அதிகாலை வரை இவ்வாறு அவதியுறும் அவனுக்கு தன்னால் முடியுமான கைமருந்தை தந்தை செய்தும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிகாலை தந்தை தனது குலத்தலைவனை காண ஓடிச் சென்று மகன் அவதியுறுவதைச் சொல்கிறார். குலத்தலைவன் கைமருத்துவர் ஒருவரை அழைத்துக் கொண்டு இளைஞனைக் காண விழைகிறார். கைமருத்துவரோ இளைஞனைப் பார்த்து விட்டு வந்து குலத்தலைவனிடம் “ இது ஒரு புதுவகை வியாதி. இது மற்றவர்களுக்கும் பரவக் கூடும் என்ற சந்தேகம் எனக்குள்ளது. இவரை சற்று தொலைவில் தனியாக இருக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் மருந்துகளை தயாரித்துக் கொண்டு வருகிறேன்“ என்றார்.

இதனைக் கேட்ட குலத்தலைவன், அக்கட்டுமஸ்தான கறுப்பின இளைஞனை தனிமைப்படுத்துகிறார். அவனுக்கென பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறையுள் அவனை அழைத்துச் செல்லும் போது அங்கு வியப்பிலிருந்த மக்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்கிறார்கள். இளம் பெண்கள் அவனைக் கண்டதும் கொல்லென சிரிக்கும் சத்தங்களும் கேட்கின்றன. என்று அக்கட்டுரையாளர் வரலாற்றைப் பதிகிறார்.

ஆகவே மக்களுக்குள் புதிய வகை நோய் அறிமுகமாகும் போது ஆதிக்குடிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தும் முறையையே கையாண்டுள்ளார்கள் என்பதை இதை வாசிக்கும் போது எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே கொரோனாவுக்கு எதிராக மருத்துவத்துறை உரிய மருந்தைக் கண்டுபிடிக்க எடுக்கும் காலத்திற்குள் ஏற்படும் இழுபறியால் மக்களை தண்டிக்கும் அளவிற்கு கதையாடல்களை பரப்புவது பொருத்தமற்றது. மருந்து கண்டுபிடிப்பாளர்களின் தவறு, மக்களின் தவறல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தனிமைப்படுத்தும் நடைமுறையை மதித்து நடப்பதன் மூலம் தங்களையும், தங்களை அண்டி வாழும் மக்களையும், நாளைய சமூகத்தினையும் ஆரோக்கியமாக வாழ உதவுவோமாக!

யு.எல்.எம்.ஹரீஸ்
(வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...