ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல், 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த இடங்களிலேயே இவ்வாறு பாடசாலைகள் ஆரமபிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதற் கட்டமாக ஏற்கனவே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட வகையில், சுகாதார வழிகாட்டல்கள், சமூக இடைவெளியை பேணியவாறு தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
ஒக்டோபர் 09ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 இரண்டாம் அலை பரவல் காரணமாக, கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, மீண்டும் நவம்பர் 09ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் பாடசாலைகளை ஆரம்பிப்பது நவம்பர் 23ஆம் திகதி வரை, மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க, கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment