யாழ். பல்கலையில் வெளிவாரி பரீட்சைகள் ஒத்திவைப்பு

கொரோனா பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள்  அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு நேற்று (27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணியும் இடம்பெற்றது.

இந்நிலையில்,  நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் பலர், மாவட்டங்களைக் கடந்து வர முடியாத நிலை காணப்படுகின்றமை பற்றி  ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நிலைமைகள் சீராகும் வரை பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையப் பணிப்பாளருக்குத் துணைவேந்தர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதேவேளை பரீட்சை ஒத்திவைப்பு, மறு திகதியிடல் பற்றிய விபரங்கள் பகிரங்க அறிவித்தல் மூலமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையவழித் தகவல்களுக்கூடாகவும் வெளியிடப்படும்.

இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பரீட்சைகள் பற்றிய மேலதிக தகவல்களை   021 222 3612 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.     

(நிதர்சன் விநோத், ஐங்கரன் சிவசாந்தன்)


Add new comment

Or log in with...