மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் நேற்று (16) மாலை மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கித்துள், முந்தனையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான மண்அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேசவாதிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை குறித்த ஆற்றுப் பகுதியின் ஓரத்தில் சுரங்கம் அகழ்ந்து மண் எடுத்துக் கொண்டிருக்கும்போது குறித்த மண்மேடு இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய கரடியனாறு, இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன் எனும் 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு தற்போது கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)
Add new comment