விசாரணைகளை துரிதப்படுத்த பொலிஸ் குழுக்களுக்கு பணிப்பு

ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜை விடுதலை செய்தது தொடர்பான விசாரணைகளை, துரிதப்படுத்துமாறு விசாரணைகளை முன்னெடுக்கும் இரு பொலிஸ் குழுக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய 07 விசேட அம்சங்கள் தொடர்பில், இரு குழுக்களும் விசாரணை நடத்துவதோடு உள்ளக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்குதல் உட்பட 07 அம்சங்களின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மாஅதிபரினால் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கைதான ரியாஜ் ஜந்தரை மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் கவனத்திற்கும் இது, கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைப்படி சி.ஐ.டி பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ், இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், ஒரு பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 60 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 04 அம்சங்களின் அடிப்படையில் ஒரு குழுவும் 03 அம்சங்களின் அடிப்படையில் மற்றொரு குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பில் சட்ட மாஅதிபர்,பாதுகாப்பு செயலாளர் ஆகியோின் பங்குபற்றலுடன் சந்திப்பொன்று நடந்தது.

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இதன்போது பணிக்கப்பட்டது. விசாரணை முடிவுகளுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, புதிய பரிமாணத்துடன் விசாரணைகள் நடைபெறுவதாகும் அவர் குறிப்பிட்டார். (பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...