அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி, உச்ச நீதிமன்றத்தின் குறித்த முடிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த மனுக்களின் பரிசீலனை, கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு பரிந்துரைக்கப்படும் என, நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment