20 ஆவது திருத்தம் மீதான விசாரணை நேற்று நிறைவு

ஜனாதிபதி, சபாநாயகருக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீது நான்காவது நாள் பரிசீலனை நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கடந்த 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான சமர்ப்பிப்பு அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் முடிவடைய இருந்தாலும், மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைக்க சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

அதன்படி நேற்று திங்கட்கிழமை அவர் மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைத்திருந்தார் .

20 ஆவது திருத்த சட்ட நகல் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு எதிராக வழக்கு தொடர ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.இந்த நிலையில் 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்ற தீர்ப்பு 12 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.(பா)


Add new comment

Or log in with...