தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட எடுத்த முடிவு முஸ்லிம் கட்சிகளுக்கு முன்மாதிரி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி அறைகூவல்

தமது இனத்தின் விடிவுக்காக ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு தமிழ்க் கட்சிகள் இணைந்திருப்பது போன்று முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும் என முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதிலும், உரிமைப் பிரச்சினைகள் மாத்திரமின்றி, சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தீர்வு தர வேண்டும்.

இவர்களைப் பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.

தேசிய ஐக்கிய முன்னணியானது, சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு பல தடவை முயற்சித்தது. ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளையாவது ஒன்றுபடச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின.

பொதுத்தேர்தலில் எதிரணியில் நின்று வெற்றிபெற்றவர்கள், இப்போது சமூகம் தொடர்பில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாது ஆளுங்கட்சியில் தாவப் பார்க்கின்றனர்.எனவே, முஸ்லிம் கட்சிகள் தமது நலன்களுக்கு அப்பால் சமூகத்துக்காக உழைக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது என அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...