மன்னாரில் இளம் பெண் கொலை; சகோதரி உட்பட இரு பெண்கள் கைது

மன்னாரில் இளம் பெண் கொலை; சகோதரி உட்பட இரு பெண்கள் கைது-21-Yr Old Killed-2 Arrested Including Her Own Sister-Searching for 3rd Suspect

- கொலைக்கான காரணம் வெளியானது
- பிரதான சந்தேகநபரான மாமனாரை தேடி வலை வீச்சு

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் சகோதரி உள்ளிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையின் பிரதான சந்தேக நபரனான இளம் பெண்ணின் மாமனார் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார்.

மன்னாரில் இளம் பெண் கொலை; சகோதரி உட்பட இரு பெண்கள் கைது-21-Yr Old Killed-2 Arrested Including Her Own Sister-Searching for 3rd Suspect

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸாரின் புலன் விசாரணையில் மன்னார் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் CCTV கமெரா பதிவை வைத்து நெடுந்தீவைச் சேர்ந்த பெண்கள் இருவரும் ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவைச் சேர்ந்த, 21 வயதான, டொறிக்கா ஜூயின் என்ற இளம் பெண்ணே இவ்வாறு கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு மன்னார் உப்பளத்தில் வீசப்பட்டிருந்தமை மன்னார் பொலிஸாரின் விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அவரது சடலம் மன்னார் உப்பளம் பகுதியில் இருந்து கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து மன்னார் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். தடயவியல் பொலிஸாரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தடயப்பொருள்களும் மீட்கப்பட்டன.

சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மன்னாரில் இளம் பெண் கொலை; சகோதரி உட்பட இரு பெண்கள் கைது-21-Yr Old Killed-2 Arrested Including Her Own Sister-Searching for 3rd Suspect

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கொண்டு அவர் தொடர்பில் மடு ஆலயத் திருவிழா இடம்பெற்ற காலப்பகுதி மற்றும் மன்னாரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது கொலை செய்யப்பட்ட இளம் பெண், இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவருடன் சென்று மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்ட காட்சி பதிவாகியிருந்தது.

அந்தக் காட்சியைப் பெற்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இருக்காத நிலையில், தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவரின் சொந்த ஊர் நெடுந்தீவு என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சகோதரி (30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் நெடுந்தீவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள்   மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரும் மன்னார் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், தலை மறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேகநபரான, கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகின்றார்.

சகோதரியின் கணவருக்கும் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார். இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது.

இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார்.

அவரது தாயின் சகோதரன் செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர். அதனால் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்க வேண்டும் என்று தெரிவித்து சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரிய தாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளனர்.

அங்கு நகரில் நடமாடிவிட்டு உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்து வைத்திருந்துள்ளனர். உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்' என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சோமதிலக, மற்றும் பொலிஸ் அதிகாரிகளான    பியசேன, வரதன், , நிசாந்தன்,  பிரியா மற்றும் பொலிஸ் சாரதி ஜனந்தன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

(மன்னார் குறூப்  நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)


Add new comment

Or log in with...