Saturday, August 15, 2020 - 4:13pm
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெனாண்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இந்நிலையில், இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள், அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவணி இடம்பெற்றதோடு, மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதி நிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையிடம் ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் குறூப் நிருபர் – எஸ். றொசேரியன் லெம்பேட்)
Add new comment