யுவதி ஒருவரை மீட்பதற்காக ஏரியில் குதித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் பண்டாரகம - பாணந்துறை வீதியில் உள்ள பொல்கொட பாலத்திலிருந்து யுவதி ஒருவர் ஏரியில் குதித்துள்ளதோடு, யுவதியை மீட்பதற்காக குறித்த இளைஞன் ஏரிக்குள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த யுவதி பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், நீரில் குதித்த குறித்த இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வெல்லன்துடுவவில் வசிக்கும் யுவதியின் உறவினரான இளைஞனே இவ்வாறு ஏரிக்குள் குதித்து காணாமல் போயுள்ளதோடு, அவரை தேடும் பணியில், பொலிசார் மற்றும் மீட்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த யுவதிக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் இருந்த காதல் தொடர்பை அடுத்து, அந்த இளைஞனின் நடவடிக்கை சரி இல்லை என தெரிவித்து, யுவதியின் குடும்பத்தினரால் இளைஞனுக்கு அறிவுறுத்தப்பட்டு அவர்களின் தொடர்பு இடை நிறுத்தப்பட்டதாகவும் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் இவ்விடயம் இடம்பெற்றதாகவும், யுவதியின் சித்தி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த யுவதிக்கு மற்றுமொரு நபரை திருமணம் முடித்து வைப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில், ஏற்கனவே அவரை காதலித்த இளைஞன், குறித்த யுவதி தன்னுடன் இருந்த புகைப்படங்களை, தற்போது திருமணம் முடிக்க இருந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவரது அந்தரங்க படங்கள் தம்மிடம் இருப்பதாக அவருக்கு தெரிவித்துள்ளதாகவும் யுவதியின் சித்தி தெரிவித்தார்.
இந்நிலையிலேயே குறித்த யுவதி இம்முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம பொலிசார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333
Add new comment