லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்-Lebanon Beirut Blast

- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்
- குடியிருப்புகள், கட்டடங்கள் தரை மட்டம்
- வெடிப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை

லெபனானின் தலைநகரான, பெய்ரூட்டில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பாரிய பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு என, தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 'ஓரியன்ட் குயின்' எனப்படும் இத்தாலி கப்பலில் இருந்த பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அக்கப்பலின் கெப்டன் அல் ஜெஸீரா தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதோடு, குறித்த நிலப்பரப்பு முற்றாக தரைமட்டமானதாக காட்சியளிக்கின்றதோடு, பலர் காயமடைந்தும், கட்டடங்கள் மற்றும் கட்டங்களின் கண்ணாடிகள், வாகனங்கள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

 

 

 

 

 

 

 

 


Add new comment

Or log in with...