- ஜனாதிபதி, பிரதமருடன் சம்பிரதாயபூர்வ சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஆயுதப்படைகளின் தலைவரும், தலைமைத் தளபதியுமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2019 ஜனவரி 01 ஆம் திகதி வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படையின் 23ஆவது தளபதியாக பொறுப்பேற்றார், அதனைத் தொடர்ந்து இன்றையதினம், (ஜூலை 14) ஜனாதிபதியினால் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படைக்கும், தாய்நாட்டிற்கும் உன்னத சேவையை வழங்கிய அட்மிரல் பியல் டி சில்வா, தனது இரண்டாவது இல்லமான இலங்கை கடற்படையில், தனது 36 ஆண்டுகால கடற்படை சேவையிலிருந்து நாளை (ஜூலை 15, 2020) ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 வருட பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், தனது சேவைக் காலப்பகுதியில் வீர விக்ரம, வீர விபூஷன, ரண விக்ரம, ரணசூர, விஷிஷ்ட சேவா விபூஷன உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.
ஓய்வு பெறவுள்ள, கடற்படைத் தளபதி பியல் டி சில்வா, சம்பிரதாயங்களுக்கமைய, நேற்றையதினம் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
தாய் நாட்டுக்காக அவர் செய்த சிறப்பான பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது ஓய்வு வாழ்க்கை வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.
பாரம்பரியமான நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்ததோடு, நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டார்.
Add new comment