- அக்போகமவில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு
- மேலும் 50 பேர் சுய தனிமைப்படுத்தலில்
அக்போகம பிரதேசத்தில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டதனைத் தொடர்ந்து, அவரது குடும்ப அங்கத்தவர்கள் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேச செயலகத்தில் அக்போகம பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் அங்குள்ள நிலவரம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (13) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அவரோடு தொடர்புபட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தொடர்புடைய 50 பேரிற்கு PCR பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவை பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நபருடன் தொடர்புடையவர்களாக, அக்போகம கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட 14 குடும்பங்களைச்சேர்ந்த 56 பேர் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும், அந்த நபருடன் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பு கொண்டிருந்த 50 நபர்களின் பி.சி.ஆர் சோதனைகள் இன்று அக்போகம மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டது.
அத்து சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு வீட்டிலேயே அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அமைக்குமாறு மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், சுகாதாரப் பிரிவு மற்றும் இலங்கை பாதுகப்பு படை ஊழியர்களுடன் இணைந்து சுகாதார பாதுகாப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த நபர் பயணித்த இடங்கள் மற்றும் ஏனைய தொடர்புகள் தொடர்புபட்ட விடயங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், அக்போகம பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், அத்தியாவசிய சேவைகளைத் தவிர தேவையற்ற வகையில் வெளியில் செல்வது இந்நேரத்தில் பொருத்தமானதல்ல என்று மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
(திருமலை மாவட்ட விசேட நிருபர், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர், அன்புவழிபுரம் தினகரன் நிருபர், ரொட்டவெவ குறூப் நிருபர்)
Add new comment