பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று

பிரபல பொலிவூட்  நடிகர் அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக,  கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.  அங்கு இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைவரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பிரபல பொலிவூட்  நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,  

“நான் கொரோனா பரிசோதனை செய்தேன். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...