தாய் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் விபத்து
இன்று (12) பிற்பகல் 3.15 மணியளவில் வியாங்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் பலியாகியுள்ளனர்.
தனது இரு பிள்ளைகள் மற்றும் மேலும் இருவருடன், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற குறித்த பெண்ணினால், முச்சக்கர வண்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாங்கொடை - மல்லஹேவ வீதியில், கும்பல்ஒலுவ பிரதேசத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, வீதியை விட்டு பாய்ந்த முச்சக்கர வண்டி, வயலுக்குள் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற 40 வயதான குறித்த பெண், அவரது 9 மற்றும் 1 ½ வயது ஆண் பிள்ளைகள் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்கள் வியாங்கொடை, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வியாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment