வெலிக்கடை சிறையிலுள்ள 315 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

வெலிக்கடை சிறையிலுள்ள 315 பேருக்கு கொரோனா தொற்று இல்லை-315 Welikada Personals Tested Negative for COVID19-Shavendra Silva

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 315 பேரின் சோதனை முடிவுகளில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளதா என மேற்கொள்ளப்படும் PCR சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஆயினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

315 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை முடிவுகளில் நேற்றைய தினம் (07) 170 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனையோரின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த 315 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையான ஒருவர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம், கந்தக்காடு), கடந்த ஜூன் மாதம்  27ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சுகவீனமுற்ற குறித்த கைதிக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதோடு, அவருடன் தொடர்புடைய சுமார் 180 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொடர்பான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிட வருவதற்கு, மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று (08) அறிவித்திருந்தது.


Add new comment

Or log in with...