சவூதியிலிருந்து 275 பேர், கட்டாரிலிருந்து 05 பேர் வருகை

- பிலிப்பைன்ஸிலிருந்து 41 பேர் நேற்று வருகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் சவூதி அரேபியா, கட்டார், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 321 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 275 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று (07)  காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புக் கருதி புறப்பட்டுச் சென்றிருந்த விமான பயணிகளே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 266 எனும் விசேட விமானத்தின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை 7.10 மணிக்கு வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு, கட்டாரின் டோஹா நகரிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணிக்கு  இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்கள் 05 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

கட்டாரில் கப்பலில் பணியாற்றுவதற்காக இவர்கள் புறப்பட்டுச் சென்றிருந்தவர்களாவர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலிருந்து இலங்கையர்கள்  41 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம்  நேற்றிரவு 11.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1423 எனும் விசேட விமானத்தின் மூலம் இப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் பிலிப்பைன்ஸில் தொழில்வாய்ப்புக் கருதி புறப்பட்டுச் சென்றிருந்தகளாவர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...