சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுக்கள்; தேர்தல் வன்முறைகளை ஏற்படுத்த வழிவகுக்கும்

கவனம் செலுத்துமாறு கஃபே அமைப்பு அவசர வேண்டுகோள்

சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும். இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு,  அவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் நேற்று (06) வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நிலைவரங்களை அவதானிக்கும்போது, திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. 

குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில், சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் கட்சி சார்பாக மற்றும் சுயேச்சையாக வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்காளர்களுக்கு தமது தேர்தல் நிலைவரங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இதனால் தேர்தல் வன் முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

குறிப்பாக பொத்துவில், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இந்நிலை அதிகரித்து காணப்படுவதால், குறிப்பிட்ட இப்பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது அவசியமென, இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.


Add new comment

Or log in with...