அழுத்தங்களுக்கு அடிபணியாது சீருடையின் கௌரவத்தை பேண பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் கடும் உத்தரவு

அழுத்தங்களுக்கு அடிபணியாது தமது சீருடையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொலிஸார் செயற்படுவது முக்கியமாகும்.

தமது பிரதேசங்களில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளே பொறுப்புக் கூறவேண்டுமெனவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரியளவில் இடம்பெறும் நிலையில் அதற்கு அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தான் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், குற்றச் செயல்களை தடுக்க முடியாமற்போனால் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதற்கும் வெட்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிப்பணியாது தமது சீருடையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது முக்கியமாகும்.

சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம். அவ்வாறான  தவறுகளுக்கான பொறுப்புக் கூறலிலிருந்து அந்தந்த மாகாணங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வரையான சகலரும் சுலபமாக நழுவி விட முடியாது.மாறாக இம்மாகாணங்களில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தமது கடமைகளை ஏனைய தொழில்கள் போல கணக்கெடுக்காமல் நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை உங்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது என்பதைக் கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியம். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...