மார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை

அரசு முடிவு; பரிந்துரைக்கு விசேட குழு நியமனம்

கொரோனா தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மின் கட்டண அறவீடுகளின் போது சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அது தொடர்பாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர  சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், 

அமைச்சரவையில் இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

அதற்கிணங்க மக்களுக்கு சலுகை வழங்கக் கூடிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரிடம் வினவினார். 

அது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர்,சலுகை வழங்குவது தொடர்பில் பரிந்துரை செய்வதற்கு விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் மேற்படி குழு சமர்ப்பிக்கும் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனையடுத்து சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறெனினும் குறிப்பிட்ட மூன்று மாத காலத்தில் மின்கட்டணம் செலுத்தப்படாத நிலையில் மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...