தமிழ் வாக்குகளை சிதறடிக்கவே சிலர் நுவரெலியாவில் களமிறக்கம்

மக்கள் விழிப்படைய வேண்டும் என்கிறார் இராதா

மலையகத்தில் புதிதாக போட்டியிடும் சிலர் அரசியல் முகவர்களாகும். தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே இவர்கள்  களமிறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

லிந்துலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,மொட்டு கட்சியில் மூன்று சிங்கள வேட்பாளர்களும், 8தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். சிங்கள மக்களின் வாக்குகள் மேற்படி மூவருக்குமே சென்றடையும். தமிழ் வாக்குகள் சிதறிப்போகும். எனவே, தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறுவது கடினமாகிவிடும். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி மூன்று தமிழ் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. அந்த மூவரும் வெற்றிபெறுவது உறுதி. இந்த தேர்தலில் அரசியல் முகவர்கள், ஒப்பந்தக்காரர்களாக சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். திகாம்பரம் பக்கம் இருந்த ஒருவர் இறுதிநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம்தாவி, ரணிலின் முகவராக போட்டியிடுகின்றார்.

அடுத்தது அனுசா  சந்திரசேகரன். சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணிக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மலையக மக்கள் முன்னணி எம்வசமே உள்ளது. சுயேச்சையாக போட்டியிடுபவர்களால் வெற்றிபெறமுடியாது என்பதே யதார்த்தம். அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராகவே அனுசா போட்டியிடுகின்றார் என்றார்.

ஹட்டன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...