யாழ். மாதகல் கஞ்சா மீட்பு தொடர்பில் இருவர் கைது

- மேலும் 46 கிலோ கஞ்சா உட்பட 104 கி.கி. கஞ்சா மீட்பு

யாழ். மாதகல், குசுமந்துறையில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா தொடர்பில் சந்தேகநபர்கள் இருவருடன், மேலும் 46 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 104 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

யாழ். குசுமந்துறை கடற்கரை பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கை கடற்படையினரால் நேற்று (12) மேற்கொள்ளப்பட்டபோது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட ஒருதொகை கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடற்படையினர் வழக்கமாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கு அமைய, நேற்றையதினம், வடக்கு கட்டளை பிரிவின் கடற்படையினரால், யாழ். குசுமந்துறை கடற்கரையில்  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவ்வேளையில், கரையை நோக்கி வந்த டிங்கிப் படகிலிருந்தவர்களால், மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில், ஏதோவொரு பொருள் கரைக்கு கொண்டு வரப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அவதானித்ததை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு  கடற்படையினர் ரோந்து சென்றபோது, சில மூட்டைகள் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டமையை  அவதானித்துள்ளனர். அத்தோடு, டிங்கி படகிலிருந்தவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது, குறித்த மூட்டைகளில் 25 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 57 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தமை நேற்று  கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ள படகு மற்றும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்தனர். இதன்போது, குறித்த டிங்கி படகுடன் சந்தேகநபர்கள் இருவர் மாதகல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம் கிடைக்கப் பெற்ற  தகவல்களின் அடிப்டையில், கடற்பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த மேலும் 13 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில், 46 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய  கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுமார் 104 கிலோகிராம் கேரள கஞ்சா,  டிங்கி படகுடன் சந்தேநபர்கள் இருவர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...