பிறைந்துரைச்சேனையில் தனிமையில் வசித்து வந்த பெண் கொலை

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா (60) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் தனிமையில் வசித்து வந்த குறித்த பெண், நேற்றிரவு (10)  10.00 மணியளவில் அதே வீதியில் வசித்து வரும் அவரது மகளின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு  வந்ததாகவும்,  இன்று காலை அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது, கதவு திறந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்  பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த பெண் அவ்வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் இக்கொலையைச் செய்தவர்கள் என்ன நோக்கத்திற்காக செய்தார்கள் என்பது தொடர்பிலும், இவரது வீட்டில் பொருட்கள் ஏதும் கொள்ளையிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

(கல்குடா தினகரன் நிருபர் -எஸ்.எம்.எம். முர்ஷித்)  


Add new comment

Or log in with...