எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 02ஆம் திகதி பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியானதைத் தொடர்ந்து, அதில் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் வேட்புமனுத்தாக்கல் மார்ச் 19ஆம் திகதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக, தேர்தலை நடாத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததோடு, மார்ச் 21 ஆம் திகதி அது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் ஜூன் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என, ஏப்ரல் 20ஆம் திகதி மற்றுமொரு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஆயினும் குறித்த திகதியிலும், தேர்தல் நடாத்துவதற்கான வாய்ப்பு இடம்பெறாத நிலையில், மீண்டும் இன்று (10) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி, புதன்கிழமை தேர்தலை நடாத்துவதற்கான முடிவை அறிவித்திருந்தது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய, அதி விசேட வர்த்தமானி நேற்று (09) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment