இந்தியாவில் ஜூன் மாதத்தின் பின் தினமும் 15 ஆயிரம் பேரை கொரோனா நோய் தாக்கும்

சீன ஆய்வு அமைப்பு தகவல்

இந்தியாவில் ஜூன் மாதத்துக்குப் பிறகு தினமும் 15 ஆயிரம் பேரை நோய் தாக்கும் என்று சீன ஆய்வு அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கொரோனா நோய் தாக்குதல் 2 இலட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது தினமும் 8 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சீனாவில் உள்ள லாங்சூ பல்கலைக் கழகம், வெஸ்ட் எக்காலாஜிக்கல் சேப்டி மையத்துடன் இணைந்து கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இனி கொரோனா தாக்குதல் எப்படி இருக்கும் என்று பல்வேறு கணக்கீடுகளை கொண்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

அதாவது அந்த நாட்டில் உள்ள மக்கள் அடர்த்தி, நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் பரவுதல் விதம் போன்றவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு 180 நாடுகளில் உள்ள நோய் பாதிப்பை மையமாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் ஜூன் மாதத்துக்குப் பிறகு தினமும் 15 ஆயிரம் பேரை நோய் தாக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அடுத்து வரும் 4 நாட்களில் தினமும் 9676, 10078, 10498, 10936 என்ற இலக்கத்தையொட்டி நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல அமெரிக்காவில் ஜூன் மாதத்துக்குப் பிறகு தினமும் 30 ஆயிரம் பேர் வரை நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் நோய் பாதிப்பு படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக 5 சென்டி கிரேடில் இருந்து 15 சென்டி கிரேட் வெப்பம் உள்ள பகுதிகளில் கொரோனா பரவுதல் அதிகமாக இருப்பதாகவும், வெப்பம் அதிகமான இடங்களில் சற்று குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

 


Add new comment

Or log in with...